செய்திக்குப் படம் உண்டு....\ சாலை விபத்தில் உயிரிழந்த இளைஞரின் உடலுறுப்புகள் தானம் திருவொற்றியூர், மார்ச் 16:விபத்தில் உயிரிழந்த திருவொற்றியூரைச் சேர்ந்த தினேஷ் (23) என்ற இளைஞரின் உடலுறுப்புகள் அவரது பெற்றோர்களால் தானம் செய்யப்பட்டதையடுத்து புதன்கிழமை சிறுநீரகங்கள், கல்லீரல், இருதயம் உள்ளிட்டவை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றப்பட்டு நான்கு நோயாளிகளுக்குப் பொருத்தப்பட்டன. திருவொற்றியூர் டி.எஸ். கோபால் நகரைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரன். இவரது மனைவி வைரம். இவர்களுக்கு தீபா என்ற மகளும், தினேஷ் என்ற மகனும் உள்ளனர். ராஜேஸ்வரன் சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் சொந்தமாக டிராவல்ஸ் நடத்தி வருகிறார். இவருக்குத் துணையாக மகன் தினேஷ் டிராவல்ஸில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் தினேஷ் கடந்த திங்கள்கிழமை இரவு பணி முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் எண்ணூர் விரைவு சாலையில் திருவொற்றியூர் நோக்கி வந்து கொண்டிருந்துள்ளார். காசிமேடு மீன்பிடித் துறைமுகம் அருகே வந்தபோது எதிர்பாராதவிதமாக சாலைத் தடுப்புச் சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் பலத்த காயமடைந்த தினேஷை அருகிலிருந்தோர் மீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். தீவிரச் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த தினேஷூக்கு செவ்வாய்க்கிழமை திடீரென மூளைச் சாவு ஏற்பட்டது. இதனையடுத்து இவரது உடலுறுப்புகளை தானம் செய்ய தினேஷின் பெற்றோர்கள் முடிவு செய்தனர். இதனையடுத்து இதே மருத்துவமனையில் உள்ள உடலுறுப்பு தான சிறப்பு மையத்திற்கு தினேஷ் செவ்வாய்க்கிழமை மாற்றப்பட்டார். புதன்கிழமை சிறப்பு மருத்துவர்கள் மூலம் தினேஷ் உடலிலிருந்து இருதயம், கல்லீரல், சிறுநீரகங்கள் உள்ளிட்டவை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றப்பட்டன. சிறுநீரகங்கள் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிறுநீரகம் செயலிழந்த நோயாளிகளுக்குப் பொருத்தப்பட்டன. கல்லீரல் மற்றும் இருதயம் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டு நோயாளிகளுக்குப் பொருத்தப்பட்டன. தலைப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டதால் கண்களின் கருவிழிகளை அகற்ற முடியவில்லை. உடலுறுப்புகள் அகற்றப்பட்ட பிறகு தினேஷின் உடல் அவரது பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இறந்தும் உயிர் கொடுத்தான் என் மகன்: தந்தை பெருமிதம் இது குறித்து தினேஷின் தந்தை ராஜேஸ்வரன் கூறியது, எனக்கு ஒரு மகன், ஒரு மகள் மட்டுமே. இதில் பெண்ணிற்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது. என் மகன் தினேஷூக்கு விரைவில் திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்து வந்தோம். இந்நிலையில் விபத்தில் சிக்கி பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை திடீரென தினேஷூக்கு மூளைச்சாவு ஏற்பட்டுவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்செய்தி எங்களை அதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டது. ஆனால் என்ன முயற்சி எடுத்தாலும் என் மகன் திரும்பி வரப்போவதில்லை என்ற நிலை ஏற்பட்டது. இந்நிலையில் உடலுறுப்பு தானம் செய்வது குறித்து உறவினர்கள், நண்பர்கள் விளக்கிக் கூறினர். எனது மகன் இறந்து போய்விட்டாலும் அவனது உடலுறுப்புகளைத் தானம் செய்வதன் மூலம் நான்கு பேருக்கு மறுவாழ்வு கிடைக்கும் என்பதால் தானம் செய்ய ஒப்புக் கொண்டோம். இனி இறந்தும் நான்கு பேருக்கு உயிர் கொடுத்தான் என் மகன் என்பதை நினைத்துப் பெருமை கொள்ள வேண்டியதுதான் என்றார் ராஜேஷ்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக